×

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது

சென்னை: கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை கணவர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ வைரலான நிலையில், சென்னை காவல் துறையினர் கணவரைக் கைது செய்துள்ளனர். பூந்தமல்லி வழியாகச் செல்லும் கோயம்பேடு மேம்பாலத்தில் இளம்பெண் ஒருவருடன், இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தை நிறுத்திய அந்த இளைஞர், அப்பெண்ணை கைகளாலும், தான் அணிந்து வந்திருந்த ஹெல்மெட்டாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் அப்பெண் சம்பவ இடத்திலேயே மயங்கியுள்ளார். இதையடுத்து பதட்டமடைந்த அந்த இளைஞர், மயக்கமடைந்த பெண்ணுக்கு தண்ணீர் கேட்டு, அந்த வழியேச் சென்றவர்களின் உதவியைக் கேட்டுள்ளார். இந்நிலையில், யாரும் உதவ முன் வராத நிலையில், அப்பெண்ணைத் தூக்கி இருசக்கர வாகனத்தில் அமர வைத்துக்கொண்டு, அந்த இளைஞர் சென்றுவிட்டார்.

இதை அந்த வழியே சென்ற சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே, வீடியோவில் உள்ள ஆதாரத்தின் அடிப்படையில், இளம்பெண்ணை கைகளாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாகத் தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பேரில், அந்த வீடியோவில் பதிவான வண்டி எண்ணை வைத்து, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரோஷன் என்பவரை கோயம்பேடு போலீசார் அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் சந்தியா எனவும், அவர் ரோஷனின் மனைவி என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், குடும்ப பிரச்சினை காரணமாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

The post சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbed Development ,Chennai ,Coimbed Improvement Road ,Poonthamalli ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...